அதிமுகவின் 42வது ஆண்டு விழா... 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த ஜெ. வேண்டுகோள்

இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அண்ணா தி.மு.க. தொடங்கி 41 ஆண்டுகள் நிறைவடைந்து, 17.10.2013 அன்று 42 வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், 17ந் தேதி முதல் 19ந் தேதி வரை மூன்று நாட்கள் அண்ணா தி.மு.க.வின் 42வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.
மேலும், தமிழகத்திலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17ந் தேதி அன்று ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, கழகத்தின் 42வது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications