“சொன்னீங்களே... செஞ்சீங்களா..?” விளம்பரத்திற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு
சென்னை: அதிமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, பதவியில் அமர்ந்ததும் அதிமுக அரசு செய்யத் தவறி விட்டதாகக் குறிப்பிட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் விதவிதமான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச நிலம் போன்ற வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படவில்லை என்ற கோணத்தில் அந்த விளம்பரங்களை திமுக தயாரித்து, தேர்தல் பிரச்சார விளம்பரமாக ஒளிபரப்பி வருகிறது. இதில், ஜெயலலிதாவே அந்த வாக்குறுதிகளைக் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமீறலாகவும், விளம்பர நியதிகளுக்கு எதிராகவும் இந்த விளம்பரங்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications