எய்ட்ஸ் நோயால் அவதி: நாமக்கலில் 2 குழந்தைகளை கொன்று, தம்பதி தூக்கு போட்டு தற்கொலை
நாமக்கல்: நாமக்கலில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி தங்களின் மகனையும், மகளையும் கொன்றுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள நைனப்புடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). முன்பு லாரி டிரைவராக இருந்த அவருக்கும், அவரது மனைவி வளர்மதிக்கும் எய்ட்ஸ் நோய் இருந்தது. இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர்.
தற்கொலை செய்யும் முன்பு அவர்கள் தங்களின் மகள் பிரியா மற்றும் மகன் சரத்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு தூக்கிலிட்டு கொன்றனர். பின்னர் கணவனும், மனைவியும் ஆளுக்கொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதில் பிரியா தற்போது தான் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். சரத்குமார் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று காலை வளர்மதியின் தாய் அவர்களின் வீட்டுக்கு வந்தபோது 4 பேரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றினர். மேலும் இறப்பதற்கு முன்பு கோவிந்தராஜ் எழுதிய கடிதத்தை கண்டுபிடித்தனர்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் பெயரில் உள்ள எல்.ஐ.சி. தொகையை எனது பெற்றோருக்கும், வளர்மதி பெயரில் உள்ள எல்.ஐ.சி. தொகையை அவரது பெற்றோருக்கும் கொடுக்க வேண்டும். நகை, பணத்தை சகோதரர் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும். இது முக்கியமான கடிதம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.