விமானத்தில் ஏர் ஃபோன் கேட்டு இருக்கையை சேதப்படுத்திய பயணிகள்.. ரூ.60,000 அபராதம்
திருச்சி: மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் இருக்கையின் கைப்பிடியை சேதப்படுத்தியதாக பயணிகள் இரண்டு பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வரும் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் சென்னை வந்தது. சென்னையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அங்கிருந்து திருச்சி புறப்பட்டது. அப்போது இருக்கையில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி விமான பணிப்பெண்களிடம் சிவகங்கையைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் அப்துல் வஹாப் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் திருச்சி வந்தடைந்ததும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் இருவரும் இருக்கையின் கைப்பிடியை உடைத்ததாக விமானப் பணிப்பெண்கள் விமானநிலைய மேலாளரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பயணிகள் இருவரும் விமான பணிப்பெண்கள் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் கூறினார். அப்போது, கைப்பிடி உடைந்ததற்கான சேதத்தொகையை கட்டி விடுவதாக பயணிகள் இருவரும் கூறினர். அதனையடுத்து இருவருக்கும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இருதரப்பினரும் சமாதானமாக போவதாக தெரிவித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications