முடங்கிய ஏர்செல் சேவை.. வாடிக்கையாளர்கள் கொந்தளிப்பு.. கோவை அலுவலகம் முற்றுகை
கோவை: ஏர்செல் சேவை முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
ஏர்செல் நிறுவனம் விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டெலிபோன் சேவை நிறுவனத்திற்கு தமிழகத்தில்தான் வாடிக்கையாளர்கள் அதிகம். சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் கிராமங்களில் முதல் முதலாக கோபுரம் அமைத்து செல்போன் இணைப்புகள் தந்தது இந்த நிறுவனம்தான் என்பதால் தமிழக செல்போன் புரட்சியில் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்த நிலையில் கடந்த பல நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏர்செல் சேவை முடங்கியுள்ளது. பொதுவாக, சர்வீஸ் வழங்கும் தொலைபேசி நிறுவனத்தை மாற்றிக்கொள்ள, செல்போன் நிறுவனத்துக்கு குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் கோட் எண் வழங்குவார்கள். அந்த கோட் எண்ணை வாடிக்கையாளர் மாற விரும்பும் நிறுவனத்தில் அளித்தால், புதிய நிறுவனத்தில் அதே பழைய எண் கிடைக்கும்.
ஆனால், அப்படி எஸ்எம்எஸ் அனுப்ப ஏர்செல் சிக்னல் கிடைக்க வேண்டும், இப்போது அதுவும் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கோவையை தலைமையிடமாக கொண்டது ஏர்செல் நிறுவனம் என்பதால், அங்குள்ள அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஏர்செல் வாடிக்கையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications