அட்சய திருதியை ஸ்பெஷல்: ஒரே நாளில் தமிழகத்தில் 6,000 கிலோ தங்கம் விற்பனை
Recommended Video
சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மட்டும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாள் அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் அட்சய திருதியை தினத்தன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அட்சய திருதியை நாளான நேற்று தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டமாக இருந்தது. தங்க நகைகள், நாணயங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
சென்னையில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் வரிசையில் காத்திருந்து நகை, தங்க நாணயம் வாங்கிச் சென்றுள்ளனர். அட்சய திருதியையை முன்னிட்டு நகை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டது.
தங்கம் ஒரு கிராம் ரூ. 2 ஆயிரத்து 992க்கும், பவுன் ரூ. 23 ஆயிரத்து 936க்கும் விற்பனையானது. நேற்று முன்தினத்தை விட தங்கத்தின் விலை அதிகரித்த போதிலும் மக்கள் யாரும் விலை உயர்வை கண்டுகொள்ளவில்லை.
நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானதாக தங்க நகை வியாபாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.