அட்சய திருதியை: பொன் மழை பொழிய ஆதிசங்கரர்- காலடியில் கனகதாரா யாகம்
திருவனந்தபுரம்: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் நம்பூதிரிகள் நடத்திய கனகதாரா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த யாகத்தில் லட்சுமி யந்திரமும், தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகள் வைத்து, 10008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்பட்டது.
அட்சய திருதியை தினமான இன்று காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கேரளா மாநிலம் காலடி என்னும் ஊரில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு பிறந்தவர் ஆதிசங்கரர். இவர் சிறு வயதிலேயே குருகுலத்தில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
அந்த காலத்தில் குருகுல வழக்கப்படி யாசகம் (பிச்சை) எடுத்துதான் உணவு உண்ண வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் யாசகத்திற்காக புறப்பட்டார். அவர் யாசித்த வீடு ஒரு ஏழையின் வீடு. அந்த வீட்டின் முன்பு நின்று, 'பவதி பிட்சாந்தேஹி' என்று மும்முறை குரல் கொடுத்தார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த பெண், 'ஐயா! தங்களுக்கு உணவிட இந்த ஏழையின் வீட்டில் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனி மட்டுமே உள்ளது. இந்தாருங்கள்' என்றாள்.
அதைப் பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர், 'ஏழ்மை நிலையிலும் கூட, தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாக தந்துவிட்ட அந்தப் பெண்ணின் குணத்தை எண்ணி வியந்தார். அந்தப் பெண்ணின் ஏழ்மையை போக்க எண்ணிய ஆதிசங்கரர், அந்த வீட்டின் முன்பு நின்றபடி மகாலட்சுமியை நினைத்து மனமுருக வேண்டினார்.

அப்போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள், பொன் மழையாகப் பெய்தன. வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் குவிந்தன. சற்று முன்வரை பரம ஏழையாக இருந்த அந்தப் பெண், மிகப்பெரும் செல்வந்தராக மாறினாள். ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் ஏழ்மையை அகற்றிய தினம் 'அட்சய திருதியை' ஆகும். அவர் பாடிய பாடல் 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.
கேரளாவின் காலடியில் உள்ள கிருஷ்ணர், காலடியப்பன் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் உள்ள கண்ணன், ஒரு கையில் வெண்ணெய் ஏந்தியும், மறு கையை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையை 'கிருஷ்ண அம்பலம்' என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சிவன் சன்னிதியும், இடதுபுறம் சாரதாம்பிகை சன்னிதியும், சக்தி விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளன.
இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது. இந்த ஆண்டு யாகம் கடந்த 4ம் தேதி யாகம் துவங்கியது. ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில், 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்தினர். இந்த யாகத்தில் லட்சுமி யந்திரமும், தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகள் வைத்து, 10008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்பட்டது.
அட்சய திரிதியை தினமான இன்று காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மே11ம் தேதி ஆதிசங்கர ஜெயந்தியுடன் விழா நிறைவடைகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைப் பெற்று வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வறுமை, கடன், நோய் அகலும். செல்வ நிலை உயர்ந்து, பொன், ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நாகர்கோவிலில் இருந்து 305 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்திலும், காலடி திருத்தலம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications