கூட்டணிக்குள் குழப்பம்... ஆலந்தூரில் தேமுதிகவை பின்னுக்கு தள்ளி வாக்கை அள்ளிய மதிமுக
சென்னை: ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருந்த போதும், ஆலந்தூர் சட்டசபைக்கான இடைத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகளை விட, ஆலந்தூரை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலோடு ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்தது. எனவே, அத்தொகுதியில் வாக்காளர்கள் இரண்டு வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளரும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதியில் தேமுதிகவும் போட்டியிட்டது.
கடந்த வெள்ளியன்று தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரே கட்டமாக எண்ணப் பட்டன. அதன்படி, ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருந்தும் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை விட லோக்சபா தொகுதிக்கு போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் 4,932 ஓட்டுகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
லோக்சபா தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.என்.ராமச்சந்திரன் ஆலந்தூர் தொகுதியில் 86 ஆயிரத்து, 581 ஓட்டுகள் பெற்றார். ஆனால், எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட்ட வெங்கட்ராமன் 89 ஆயிரத்து, 235 ஓட்டுகள் பெற்று இருந்தார்.
தி.மு.க. சார்பில் எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் 68 ஆயிரத்து 546 ஓட்டுகள் பெற்றார். எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட்ட ஆர்.எஸ்.பாரதி 70 ஆயிரத்து, 587 ஓட்டுகள் பெற்றார்.
அதிமுக மற்றும் திமுகவில் எம்.பி வேட்பாளரை விட எம்.எல்.ஏ. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தனர்.
ஆனால், இதற்கு நேர்மாறாக பா.ஜ. கூட்டணியில் ஒரே கூட்டணியில் இடம் பெற்று எம்.பி., பதவிக்கு போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர் மாசிலாமணி 25 ஆயிரத்து, 855 ஓட்டுகள் பெற்றிருந்தார். ஆனால், எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் காமராஜ் 20 ஆயிரத்து 442 ஓட்டுகள் மட்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications