மீண்டும் போர்க்களமான அலங்காநல்லூர்- கைதானோரை அழைத்துவரும் வரை மறியல் தொடரும் என அறிவிப்பு!
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை விடுவித்து மீண்டும் அழைத்துவர கோரி அலங்காநல்லூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
மதுரை: அலங்காநல்லூர், வாடிப்பட்டி பகுதிகள் மீண்டும் போர்க்களமாகிவிட்டது. ஜல்லிக்கட்டுக்காக 21 மணிநேரம் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவர்களை உடனே விடுதலை செய்து அழைத்து வர கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் 21 மணிநேர தொடர் போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் முன்னெடுத்தனர். நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை 21 மணிநேர போராட்டம் நீடித்தது.

ஆனால் போலீசார் தொடர்ந்தும் போராட்டத்துக்கு அனுமதி தராமல் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வாடிப்பட்டி, சோழவந்தான் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென அலங்காநல்லூர், வாடிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களுக்காக போராடியவர் இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; போராடிய இளைஞர்களுக்கு உணவு கொடுத்ததாக கைது செய்தவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; அந்த மாணவர்களை அலங்காநல்லூருக்கு அழைத்து வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு மதுரை எஸ்பி விஜயேந்திர பிதாரி உறுதியளித்தார். இருந்தபோதும் மாணவர்களை அழைத்து வரும் வரை போராட்டம் தொடரும் என்பதில் அலங்காநல்லூர் மக்கள் உறுதியாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications