காஞ்சிபுரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பார் "கேப்டன்".. பிரேமலதா
காஞ்சிபுரம்: சட்டசபைத் தேர்தலி யாருடன் கூட்டணி என்பதை காஞ்சிபுரத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களை கட்டியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் மக்கள் நலக்கூட்டணியினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
பிரதான எதிர்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டது. இந்த கூட்டணியில் ஏற்கனவே உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொடர்வதாக அறிவித்துள்ளது. ஆனால் ஆளும் அதிமுக தரப்போ அமைதி காக்கிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த படியாக மக்களிடம் வரவேற்பு உள்ள தேமுதிகவிற்கு திமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில் தேமுதிக கட்சியின் மாநில மாநாடு வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மாநாடு ஏற்பாடுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் என்றார்.

தேர்தல் கூட்டணி
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவின் ஆட்சியானது அறிவிப்பு ஆட்சியாக உள்ளது. மக்களது ஆட்சியாக இல்லை. வெள்ள நிவாரணங்கள் முறையாக நடத்தப்படவில்லை. மேலும் மத்திய அரசு கொடுத்த 1000 கோடியை தான், மாநில அரசு கொடுத்தது போல காட்டிக்கொண்டார்கள். இந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.

திருப்புமுனை மாநாடு
அண்ணா பிறந்த மண்ணில் நடைபெறும் இம் மாநாடு, தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தியது போன்ற திருப்புமுனையை மீண்டும் ஏற்படுத்தும். அதற்காகவே இம் மாநாட்டுக்கு "அரசியல் திருப்புமுனை மாநாடு' என்று பெயர் வைத்துள்ளோம்.

மாநாட்டில் யார் யார்
தேமுதிக மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை மாநாட்டின்போது நீங்களே நேரில் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

பலரும் அழைப்பு
மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, திமுக அணி, அதிமுக அணி என்று பல்வேறு அணிகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளன. பலரும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்துள்ளனர். தேமுதிகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள் ஆற்றிய அயராத பணியே இதற்குக் காரணம்.

தேமுதிக தலைமையில் போட்டியா?
யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா என்பதையும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்னும் 5 நாள்களில் அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.

காஞ்சியில் அறிவிப்பாரா?
சட்டசபை தேர்தலோ, லோக்சபா தேர்தலோ கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேமுதிகவை பல அரசியல் கட்சியினரும் கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். ஆனால் இம்முறை காஞ்சிபுரம் மாநாட்டில் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியை அறிவிக்க உள்ளதாக அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார். இதனால் அனைத்து அரசியல் கட்சியினரின் பார்வை காஞ்சிபுரம் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் விஜயகாந்த் கூட்டணியை அறிவிப்பாரா பார்க்கலாம்?.












Click it and Unblock the Notifications