ஆயிரக்கணக்கானோருடன் கதிராமங்கலத்தை முற்றுகையிட்ட நெடுமாறன், வைகோ, வேல்முருகன்!
ஓஎன்ஜிசியை எதிர்த்து போராடி கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி கதிராமங்கலம் நோக்கி வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் பேரணியாக செல்கின்றனர்.
தஞ்சை: கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நெடுமாறன், வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் புறப்பட்ட பேரணி கதிராமங்கலத்தை அடைந்தது. அங்கு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 30-ஆம் தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால் பதற்றமடைந்த கிராமத்தினர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 9 பேரை கைது செய்தனர்.

கடையடைப்பு போராட்டம்
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் கடந்த 3-ஆம் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட வந்த 75 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

வணிகர்கள் ஆதரவு
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மக்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க கோரி ராமாபுரத்தில் இருந்து கதிராமங்கலம் நோக்கி அனைத்துக் கட்சியினர் பேரணி சென்றனர்.

யார் யார் பங்கேற்பு?
இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மணியரசன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் சென்றனர். கதிராமங்கலத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகள் என்னென்ன?
இந்த பேரணியில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். கதிராமங்கலத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானவர்களை உடனே விடுவிக்க வேண்டும். காவிரி டெல்டாவை விட்டு ஓஎன்ஜிசி உடனடியாக வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications