ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே டெபிட் கார்டு: தமிழகத்தில் சிறப்பு முகாம்
தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு நாளை முதல் டிசம்பர் 2ம் தேதி வரை ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்துகிறது
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பின்னர் மக்கள் செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். காகிதமில்லாத பண பரிமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மின்னணு பண பரிமாற்றத்திற்கு தயாராகுங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு நாளை முதல் டிசம்பர் 2ம் தேதி வரை ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்துகிறது.
இந்த முகாமில் வாடிக்கையாளர், பொதுமக்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், ஜன்தன் கணக்குகளில் வினியோகிக்கப்படாமல் உள்ள ரூபே கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை துவங்க விண்ணப்பங்களை சிறப்பு முகாமில் அளிக்கலாம். எனவே, ஒவ்வொரு வங்கி கிளையிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி ஆதார் எண் இணைப்பு மற்றும் செல்போன் எண் இணைப்பு, ரூபே கார்டுகள் வினியோகம் மற்றும் ஜன்தன் சேமிப்பு கணக்கு தொடங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஆதார் எண் பெற்ற அனைவரும், தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். வங்கி கணக்கு பெற்ற அனைவருக்கும் 'ரூபே டெபிட் கார்டு' வழங்கப் படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.