“எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்.. பாமக சேரும் அணிதான் மிகப்பெரிய வெற்றி பெறும்" : ராமதாஸ்
மயிலாடுதுறை: "பாமக எந்த அணியுடன் சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். இனிமேல் அனைத்தும் சரியாக முறையாக நடைபெறும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநாட்டு மேடை அமைந்துள்ள இடத்தை பார்வையிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கலையரங்க மேடையை இடித்து அப்புறப்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அன்புமணி தைலாபுரம் வீட்டிற்கு சென்றது குறித்து செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், "அவரது வீட்டிற்கு அவர் செல்கிறார், இதெல்லாம் ஒரு கேள்வியா?" என்றார்.
மேலும் பேசிய ராமதாஸ், "பாமக எந்த அணியில் சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத வெற்றி பெறும். ஏனென்றால் அப்படிப்பட்ட பலமான கூட்டணி." என்றார்.
திமுக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, "இங்கு 10 காக்காகள் உள்ளன. அதில் 5 வெள்ளை காக்கா. அந்த 5 வெள்ளை காக்காகள் உங்களிடம் இதை சொன்னதா?" என்று கிண்டலாக கூறினார். அப்படியென்றால் அதிமுக உடன் கூட்டணியா? என செய்தியாளர்கள் கேள்வி எழுபியதற்கு "இங்கே 49 கட்சிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இன்றைக்கு யார் கட்சி ஆரம்பிக்கிறீர்கள் என்று தெரியவில்லை." என்றார்.
கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தீற்களா என்ற கேள்விக்கு, "இனி முறையாக உரிய நேரத்தில் எல்லாம் செய்யப்படும் உங்கள் சந்தேகங்கள் போக்கப்படும்." எனத் தெரிவித்தார் ராமதாஸ்.
இந்து சமய அறநிலையத்துறை விதியை எடுத்து கல்லூரி கட்டுவதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துப் பேசியது குறித்த கேள்விக்கு, கோவில்களுக்கு சொந்தமாக நிலங்களோ, பணமோ அதிகமாக இருந்தால் அதனை கல்லூரி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது தவறு இல்லை என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications