கடைசி வரை கும்பல் காமெடியனாகவே வாழ்ந்து மறைந்த "அல்வா" வாசு... இதுதான் சினிமா!
Recommended Video

சென்னை: அல்வா வாசு.. மெயின் காமெடியன்களின் சைட் காமெடியனாக வாழ்ந்து மறைந்த சாதாரண நடிகராக முடிந்து போயிருக்கிறது இவரது வாழ்க்கை. ஆனால் இவரது "நிஜம்" நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது, அதிசயிக்க வைக்கிறது.
மதுரை தந்த அற்புதக் கலைஞர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவரை திரையுலகம் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது. மாறாக இவரது திறமையை தூக்கிப் போட்டு விட்டு ஒரு கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தியுள்ளனர் சினிமாக்காரர்கள்.
தனது பெயருக்கு முன்பு கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், கவிஞர் என எத்தனையோ பெருமைகளைச் சுமந்திருக்க வேண்டிய வாசு, "அல்வா" வாசு என்ற பெயரைத்தான் கடைசி வரை சுமக்க வேண்டியிருந்தது காலக் கொடுமை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

எண்ணற்ற திறமைகள்
வாசுவின் திறமைகள் வேறு, அவரது துறையும் வேறு. இசை, கவிதை, கதை, வசனம் என்று பலதுறைகளில் திறமையுடன் இருந்துள்ளார் வாசு. இவரது கிடார் வாசிப்பு திறமை குறித்து எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் எல்லாமே மொத்தமாக தூக்கி வீசப்பட்டு ஒரு சைட் காமெடியனாகவே அவர் அறியப்பட்டது வேதனையான விஷயம்தான்.

எழுத கிடைக்காத வாய்ப்புகள்
மணிவண்ணனிடம் அசிஸ்டென்ட்டாக சேர்ந்தாலும் கூட இவர் அமைதிப்படையில் நடித்த கேரக்டர்தான் பளிச்சிட்டுள்ளது. அது அவரது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்பது தெரியவில்லை. காரணம், அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

சுரண்டப்பட்ட திறமைகள்
வாசுவின் நகைச்சுவை உணர்வும், அவரது எழுத்துத் திறமையும் காமெடியாளர்களால் சரியாக பயன்படுத்தப்பட்டு கடைசியில் இவர் காமெடிக் கும்பலில் ஒருவராக வலம் வரும் நிலைக்குப் போய் விட்டார். கடைசி வரை அந்த வட்டத்தை விட்டு இவரால் வெளியே வரவே முடியவில்லை என்பது ஆச்சரியம்தான்.

எழுத்துக்கு ஏன் மரியாதை இல்லை?
இவரது எழுத்துத் திறமைக்கு ஏற்ற தீனியை தமிழ்த் திரையுலகம் போடவில்லை. அதைப் பெற இவர் எடுக்காத முயற்சியும் இல்லை. ஆனால் கடைசி வரை ஒரு படம் கூட இவருக்காக கிடைக்காமல் போனது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.

வறுமையில்
மிகப் பெரிய திறமைகள் இருந்தும் கூட, கடைசி வரை இவர் காசு பணம் சேர்க்காமல், தனது குடும்பத்தை நிர்க்கதியாக்கி விட்டுப் போயிருக்கிறார். காரணம் இவருக்குக் கடைசி வரை கிடைத்தது சொற்ப சம்பளம்தான். அதுவும் வடிவேலு டீம் சின்னாபின்னமாகி பிரிந்து போன பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பும் நமத்துப் போய் விட்டது.

இதுதான் சினிமா பாஸ்!
திறமைகள் இல்லாதவர்கள் உச்சத்தில் இருப்பார்கள்... பலரோ, எல்லாம் இருந்தாலும் கடைசி வரை அங்கீகாரம் இல்லாமல் போவார்கள்.. வாசுவைப் போல. இதுதான் சினிமா!












Click it and Unblock the Notifications