தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்த தயார்: சந்தீப் சக்சேனா
சென்னை: தமிழகத்தில் எப்போது தேர்தல் அறிவித்தாலும், தமிழக தேர்தல் ஆணையத்திடம் தற்போது உள்ள வாக்காளர் பட்டியலின்படி தேர்தலை நடத்த தயராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்போன் எண் இணைப்பதற்கான முகாம் குறித்து கூறினார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும்‘ என்று அதிமுக எம்பி ஒருவர் கூறியுள்ளார். அப்படி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சந்தீப் சக்சேனா, தற்போது வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் சரி செய்வதற்கான பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. மேலும், தேர்தல் உடனடியாக வருவதாக இருந்தாலும் சரி, பின்னர் வருவதாக இருந்தாலும் சரி, வாக்காளர் பட்டியல் எப்போதும் தயாராக இருக்கும். என்ன நிலைமையில் இப்போது வாக்காளர் பட்டியல் உள்ளதோ அந்த அடிப்படையில் தேர்தல் நடக்கும். தேர்தல் இருந்தாலோ இல்லை என்றாலே வாக்காளர் பட்டியல் எப்போதும் தயாராக இருக்கும் என்றார்.

ஆதார் எண் இணைப்பு
மேலும் அவர், தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் ஆதார் மற்றும் செல்போன் எண், இ,மெயில் முகவரி இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, பொதுமக்களிடம் அதற்கான விண்ணப்பம் அளித்து தகவல் திரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் 2 கோடி பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 35 லட்சம் பேரின் ஆதார், செல்போன் எண், இ.மெயில் முகவரி தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் 63 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில், 4 நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

சிறப்பு முகாம்கள்
அதன்படி நாளை, வருகிற 26ஆம் தேதி, மே மாதம் 10 மற்றும் 24ம் தேதி ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். வழக்கமாக வாக்களிக்கும் செல்லும் மையங்களுக்கு பொதுமக்கள் வந்து, ஆதார் எண், செல்போன், இ,மெயில் முகவரிகளை பதிவு செய்து விட்டு செல்லலாம். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அலுவலர்கள் இரண்டு லேப்டாப் மூலம் உடனடியாக தகவல்களை பதிவு செய்வார்கள்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு
சிறப்பு முகாமுக்கு வரும் பொதுமக்கள், ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வர வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தொகுதிக்குள் மாற்றம், தொகுதி விட்டு தொகுதி மாற்றம் செய்ய விரும்புபவர்களும் இந்த சிறப்பு முகாமுக்கு வந்து சரி செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த பணிகளை, 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பொதுமக்களின் ஆதார் எண், இ,மெயில் மற்றும் செல்போன் எண்களை இணைக்கும்போது பொதுமக்கள் தேர்தல் குறித்த அனைத்து தகவல்களையும் நேரிடையாக தெரிந்து கொள்ள முடியும். இந்த பணிகள் அனைத்தும் மே 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்றார்.

நடமாடும் முகாம்கள்
தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் 70 சதவீதத்திற்கு மேல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 68 சதவீதம் ஆதார் அட்டை வழங் கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள 4.18 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது 82 சதவீதம். ஆதார் அட்டை அதிகம் இல்லாத பகுதிகளில் நடமாடும் முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க வருவாய் துறை மற்றும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கவும் திட்டம் உள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், சிறப்பு முகாம்களுக்கு வந்து ஆதார் பதிவு எண் (இஐடி) அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கிய எண்ணை (என்பிஆர்,டின்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications