வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- தமிழ்ப் படைப்பாளிகள் வேண்டுகோள்
கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டறிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை : கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டுமென்று தமிழ்ப் படைப்பாளிகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளனர்.
சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' என்கிற கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் இந்துக்கள் கடவுளாக வணங்கும் ஆண்டாளை வைரமுத்து தவறாக விமர்சித்து இருந்தார் என்று பிரச்னை எழுந்தது.
இதனையடுத்து கவிஞர் வைரமுத்து அந்த கட்டுரைக்கு மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
தமிழ் படைப்பாளிகள் அறிக்கை
இந்நிலையில், இந்து அமைப்புகள் ஒன்று கூடி வைரமுத்துவை எதிர்த்து வருகின்றன. அவர் மீது காவல்நிலையங்களில் இது தொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன. இதுகுறித்து தமிழின் முக்கிய படைப்பாளிகள் ஒன்றிணைந்து வைரமுத்துவிற்கு ஆதரவாக கூட்டறிக்கை ஒன்றை விடுத்து உள்ளனர்.அதில், வைரமுத்து சொல்லாத ஒரு கருத்துக்கு அவரை தேவை இல்லாமல் சிலர் தாக்கி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. கருத்தியல்ரீதியாக சந்திக்க முடியாமல் தனிப்பட்ட முறையில் அவரை கொச்சைப்படுத்துவதை எங்களால் ஏற்க இயலாது.
ஆண்டாளை தவறாக சித்தரிக்கவில்லை
அந்த கட்டுரையில் ஆண்டாளை எந்த இடத்திலும் வைரமுத்து ஆண்டாளை தவறாக சித்தரிக்கவில்லை. இருப்பினும் அதை அரசியல் ரீதியான பிரச்னையாக மாற்ற சிலர் முயன்று வருகிறார்கள். மேலும், அவருக்கு மன்னிப்பு கேட்க கெடு வைத்திருப்பதை படைப்பாளிகள் அனைவரும் ஒரு மனதாக எதிர்க்கிறோம். கட்டுரையை முழுதாக படிக்காமல் வைரமுத்து சொல்லாத ஒரு கருத்தை முன் வைத்து அவர்கள் போராடி வருகிறார்கள்.
அரசு தலையிட வேண்டும்
தமிழால் இணைந்திருக்கும் இந்த சமூகத்தில் எந்த ஒரு தீய சக்தியும் அதன் ஒற்றுமையை குலைப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதை உணர்த்த வேண்டிய தருணம் இது. கவிஞர் வைரமுத்து மீதான விமர்சனத்திற்கும், தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதோடு அவரின் பாதுக்காப்பையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
இது போன்ற நிகழ்வுகள் ஆரோக்கியமானது அல்ல. நாட்டில் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பயமுறுத்தி சிலர் பணியவைக்க முயல்வது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் . அதை ஒரு போதும் தமிழ் மண்ணில் நடக்க விட அனுமதிக்க முடியாது. இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பிரபஞ்சன், மாலன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம், மார்க்ஸ், ச.தமிழ்செல்வன், சு.வெங்கடேசன், ஓவியர் ட்ராஸ்கி மருது, இளையராஜா, கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், மனுஷ்யபுத்திரன்,சல்மா, அறிவுமதி, அ.வெண்ணிலா உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.