அம்மா செயல்படுத்திய நலத்திட்டங்களால் கிடைத்த வெற்றி இது: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் தான் அவருக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். இந்த வெற்றியை அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,
அம்மா ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மூலம் முதல்முறையாக வாக்களிப்பவர்கள் பயன் அடைந்துள்ளனர். அதனால் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
முதல்வர் செயல்படுத்திய நலத்திட்டங்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதிமுகவை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தேர்தலுக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவரை நடுரோட்டில் வைத்து வெட்டுவேன் என்று ராஜேந்திர பாலாஜி கூறிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையும் தாண்டி அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.