நள்ளிரவில் பழ.கருப்பையா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ. கருப்பையா வீட்டை மர்ம நபர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பழ.கருப்பையா வீட்டின் மீது கற்களை வீசிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து தன்னுடைய எம்.எல்.ஏ பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் கருப்பையா.
இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டின் மீது இந்த கற்கள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலையடுத்து, "ராயப்பேட்டையில் எனது வீட்டினைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் பழ.கருப்பையா அதிமுகவில் இருந்த போதே ஒருமுறை இதுபோன்று அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications