'ஒவ்வாமை' ஓய்வுக்குப் பின்னர் கருணாநிதியின் முதல் போட்டோ ரிலீஸ்!
தம்மை அன்பழகன் சந்தித்த புகைப்படத்தை கருணாநிதி இன்று வெளியிட்டார்.
சென்னை: ஒவ்வாமையால் ஓய்வில் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று தாம் நலமுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே கடந்த மாதம் இறுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

ஒவ்வாமையால் கருணாநிதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும் திமுக தலைமை அறிவித்தது. கருணாநிதி ஓய்வில் இருந்த நிலையில் முக அழகிரி உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.
அதே நேரத்தில் கருணாநிதியும் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வாமை பாதிப்புக்குப் பின்னர் கருணாநிதி வெளியிட்டுள்ள முதல் படம் இது. திமுக பொதுச்செயலர் அன்பழகன் தம்மை நலம் விசாரித்த போது எடுத்த படம் என அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் உடன் இருக்கிறார்.
கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் என்னன சந்தித்து உடல் நலம் விசாரித்த போது. pic.twitter.com/M5SHSIHE8T
— KalaignarKarunanidhi (@kalaignar89) November 24, 2016
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் கருணாநிதி. தற்போது தாம் நலமடைந்த நிலையில் தம்முடைய புகைப்படத்தை ட்விட்டரில் கருணாநிதி ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications