தேவையில்லாமல் என் பெயரைப் பயன்படுத்தினால்.. இளங்கோவனுக்கு அன்புமணி எச்சரிக்கை
சென்னை: காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தேவையில்லாமல் எனது பெயரை ஈவிகேஎஸ் இளங்கோவன் பயன்படுத்துகிறார். இத்தோடு அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத், சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவரை திடீரென இளங்கோவன் கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மைத்துனர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார்.
அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகளை கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம். எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று கூறியிருந்தார்.
இதற்கு அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பெயரை எதற்காக இளங்கோவன் பயன்படுத்தினார் என்று அவர் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் என்னுடைய பெயரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேவை இல்லாமல் பயன்படுத்துகிறார். என்னுடைய பெயரை பயன்படுத்துவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இனிமேல் என்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம். இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று எச்சரித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications