ஜி.கே.மணியை 2 முறை சட்டசபைக்கு அனுப்பிய பென்னாகரம்.. அன்புமணியை "முதல்வராக்குமா"?
சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணியை 2 முறை சட்டசபைக்கு அனுப்பிய தொகுதி பென்னாகரம். இங்கு தற்போது பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு இவர் ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ளார். தற்போது தர்மபுரி தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்வுசெய்யப்பட்டு எம்.பியாக இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அவருக்கான பாதுகாப்பான தொகுதியைத் தேடி வந்த பாமக பாப்பிரெட்டி பட்டி உள்ளிட்ட சில தொகுதிகளைப் பரிசீலித்து இறுதியில் பென்னாகரம் தொகுதியை முடிவு செய்துள்ளது.

வன்னியர்களின் கோட்டை
பென்னாகரம் தொகுதியானது வன்னியர்களின் கோட்டையாகும். இங்கு வன்னியர்களின் வாக்குகளே அதிகம்.

திராவிடக் கட்சிகள் அதிக முறை
இந்தத் தொகுதியில் முதல் தேர்தல் 1952ல் நடந்தது. அதன் பிறகு இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் திராவிடக் கட்சிகளே அதிகம் வென்றுள்ளன.

திமுக 4 - அதிமுக 2
பென்னாகரம் தொகுதியில் திமுக 4 முறை வென்றுள்ளது. அதிமுக 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 முறையும், ஜனதாக் கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. சிபிஐ தற்போது நடப்பு உறுப்பினராக இந்தத் தொகுதியில் இருந்து வருகிறது.

பாமகவுக்கு 2 முறை
பாமக இத்தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறையும் பாமக தலைவர் ஜி.கே.மணிதான் வெற்றி பெற்றுள்ளார்.

1996, 2001
1996 சட்டசபைத் தேர்தலில் முதலில் போட்டியிட்டார் மணி. அதைத் தொடர்ந்து 2001 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

அன்புமணிக்கு என்ன தரும்?
இப்படிப்பட்ட பென்னாகரம் தொகுதியில் சமூக மக்களின் வாக்குகளை மட்டுமே பெரிதாக நம்பி களம் கண்டுள்ளார் அன்புமணி. அவரை பென்னாகரம் மக்கள் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்புவார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதிமுகவை விரட்டியடித்த பாமக
ஆனால் பாமகவுக்கு இங்கு அசைக்க முடியாத வாக்கு வங்கி உள்ளது. அது கடந்த 2010 இடைத் தேர்தலில் திமுகவைக் கூட ஆட்டிப் பார்த்தது. அத்தேர்தலில் திமுக வென்றது. ஆனால் பாமக 2வது இடத்தைப் பிடித்து அதிமுகவை 3வது இடத்திற்கு விரட்டியடித்து டெபாசிட்டை பறி கொடுக்க வைத்தது நினைவிருக்கலாம்.
இந்த நம்பிக்கையில்தான் பாமகவினர் பென்னாகரத்தில் அன்புமணியைக் களம் இறக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications