நான் பேசலாம்னு வந்தேன்.. நெக்ஸ்ட் டைம் ஸ்டேஜ் ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. மேடை சரிந்தும் பேசிய அன்புமணி
சேலம்: சேலம் மாவட்டத்தில் பாமக கொடியேற்று விழாவில் பேசிய போது மேடை சரிந்து விழுந்த நிலையிலும் தொண்டர்களை ஏமாற்றாமல் அன்புமணி பேசிவிட்டுத்தான் சென்றார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பாமக கொடியேற்று விழா நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். விழாவில் அன்புமணி ராமதாஸ் கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.
பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் பேசுவதற்காக ஏறினார். அப்போது அவருக்கு தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவிக்க நிறைய பேர் ஏறிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட தொண்டர்கள் மேடையில் ஏறியதால் மேடை பின்பக்கமாக சரிந்தது. உடனே மேடையில் இருந்தவர்கள் ஆங்காங்கே குதித்தனர். மேடையில் நின்று கொண்டிருந்த அன்புமணி ராமதாஸ் தடுமாறினார். உடனே சுதாரித்துக் கொண்டு மேடையின் முன் பக்கமாக குதித்தார்.
அடுத்த நொடி மேடையும் சரிந்து விழுந்தது. எனினும் அவர் காயமின்றி தப்பினார். பின்னர் யாருக்காவது ஏதாவது காயங்கள் ஏற்பட்டனவா என்பதையும் கேட்டறிந்தார். இதையடுத்து அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில் முதல்வர் அவர்களே தயவு செய்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை கொடுங்கள். இல்லாவிட்டால் என் தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் உண்மை. என் தம்பிகளுக்காகவும் தங்கைகளுக்காகவும்தான் கேட்கிறேன்.
இது சமூகநீதி பிரச்சினை. சமூக நீதி என்றால் திமுக என்றீர்களே, இப்போது இந்த சமூகநீதி பிரச்சினையை ஓராண்டு ஆகியும் உங்களால் தீர்க்க முடியவில்லையே! என் தம்பிகள் போராட்டத்திற்கு தயாராகிவிட்டனர். அப்போது நடந்த போராட்டம் வேற! இப்போது அந்த போராட்டம் நடந்தால் வேறு விதமாக இருக்கும். இந்தியாவே பார்க்காத போராட்டம் தமிழகத்தில் நடக்கும். இதை தடுக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் சமூகநீதி பிரச்சினையை தீர்த்து வைங்க என்றார்.
மேலும் நான் நிறைய பேச வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் முடியவில்லை. அடுத்த முறையாவது மேடையை சரியாக போடுங்கள். உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேடை சரிந்த சம்பவம் பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் அன்புமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர்தான் காரணம். ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்தது மட்டுமன்றி தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டது. மின்மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் என்எல்சி இல்லை என்றால் தமிழகம் இருளில் மூழ்கும் என அமைச்சர் பொய்யான தகவலை தெரிவிக்கிறார். காவிரி டெல்டாவை மாவட்டங்களை அழிக்க மத்திய அரசு மிகப் பெரிய சூழ்ச்சி நடத்துகிறது. முதல்வர் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி கூறி வருகிறார். அன்புமணி பேசும்போதெல்லாம் இலவச கல்வி, இலவச மருத்துவமனை ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்கிறார். மேலும் தனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை என கூறும் அன்புமணி ராமதாஸ், அடுத்து தமிழகத்தில் பாமக ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications