மேல்மருவத்தூர் கோவிலில் அன்புமணி வழிபாடு: அனல் பிரச்சாரத்திற்கு நடுவே ஆன்மீகம்...
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார்.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்தவாரம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 தினங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பிரச்சாரம் அனலை கிளப்பி வருகிறது. வெற்றி உறுதி என்று நம்பினாலும், ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளும் பீதியை கிளப்பி வருகின்றன.
பணத்தை கொடுத்தாவது நம்மை தோற்கடித்து விடுவார்கள் என்று அச்சப்படும் அன்புமணி, அதிமுக, திமுக மீது புகார் கூறி வருவதோடு, தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகிறார்.
ஆதிபராசக்தி கோவில்
அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு நடுவே ஆன்மீக பயணமும் செய்து வருகிறார் அன்புமணி. காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார் அன்புமணி.
கருவறைக்குள் பூஜை
ஆதிபராசக்தி ஆலயத்தின் கருவறைக்குள் அன்னை ஆதிபராசக்திக்கு தீபாராதனை காட்டி வழிபட்டதோடு தேர்தல் வெற்றிக்காக மனமுருகி வேண்டிக்கொண்டார் அன்புமணி.
ஸ்டாலின்
கடந்த ஏப்ரல் மாதம் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மேல்மருவத்தூர் சென்ற மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றார். ஆதி பராசக்தி அன்னையை 108 முறை போற்றி அர்ச்சனை செய்து வழிபட்டார், அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ராமதாஸ் - அடிகளார் சந்திப்பு
கடந்த மார்ச் 3ம் தேதி பங்காரு அடிகளாரின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடிகளாரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறி பொன்னாடை போர்த்தி பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்!
ஆன்மீகத்தை நாடும் அரசியல்வாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு அடிகளாரை விமர்ச்சித்த டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு, பங்காரு அடிகளார் மூலம் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறினார். இதற்கு வன்னியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின்னர் அடிகளாருடன் நேசம் காட்டி வருகிறார் ராமதாஸ்.
வெற்றிக்காக வழிபாடு
ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு செவ்வாடை பக்தர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். பங்காரு அடிகளாரிடம் நெருக்கம் காட்டுவதன் மூலம் செவ்வாடை பக்தர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றனர் அரசியல் தலைவர்கள். ஆதிபராசக்தியின் அருள் யாருக்கு கிடைக்குமோ?.