விஜயகாந்த் அடித்த, அடிவாங்கிய கதை... 2011 முதல் 2015 வரை
சென்னை: என்னதான் கோபப்படக்கூடாது என்று யாகமும், யோகாவும் செய்தாலும் கோபப்பட வைத்து விஜயகாந்த் கையினால் அடிவாங்குகின்றனர் தேமுதிகவினர். சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக விஜயகாந்த் இருந்தபோது வில்லன்களையும், தீவிரவாதிகளையும், அடித்து, உதைத்து சுழற்றி அடித்தார். இதற்கு ரசிகர்களாக இருந்த பலரும் இன்றைக்கு தேமுதிகவில் தொண்டர்களாக மாறியுள்ளனர். அரசியல்வாதியாக மாறிய பின்னரும் ஆக்சன் ஹீரோ நினைப்பில் இருக்கும் விஜயகாந்த், பொது இடம் என்றும் பார்க்காமல் தனது கட்சி எம்.எல்.ஏக்களை அடித்து உதைக்க தவறுவதில்லை.
2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வேட்பாளரை தலையில் குட்டியது முதல்... செய்தியாளர்களை திட்டியது வரை பரபரப்பை கிளப்பத் தவறுவதில்லை விஜயகாந்த். இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த கடலூருக்குப் போன விஜயகாந்த் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவை அடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயகாந்த் கடந்த நான்கு வருடங்களாக அடித்த, அடிவாங்கிய கதையை பார்க்கலாம்.

வேட்பாளருக்கு குட்டு
தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார். வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு சரமாரியாக அறைந்தார்.

சட்டசபையில் நாக்கை துருத்தி கையை தூக்கி
சட்டசபையில் 2012ம் ஆண்டு பேசும் போது ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்யவே ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி, ஜெயலலிதாவை பார்த்து கேள்வி கேட்டார். இதனால் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் இன்னமும் சட்டசபைக்கு போகாமல் இருக்கிறார்.

விமானநிலையத்தில் கோபம்
அதன் பின்னர் 2014 பிப்ரவரியில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கினை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் கூட்டணி பற்றி கேள்வி கேட்ட டிவி செய்தியாளர் ஒருவரிடம் "போயா உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று நாக்கை துருத்தி சத்தமிட்டு கோபத்தைக் காட்டினார்.
ஏர்போர்ட் செய்தியாளருக்கு திட்டு
சென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

ரசிகருக்கு பளார்
மலேசியாவில் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முயன்ற ஷாஜகான் என்ற ரசிகருக்கு விட்டார் ஒரு "பளார்". இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டெல்லியில் நிருபர் மீது பாய்ச்சல்
கடந்த ஏப்ரல் 27ம் தேதி டெல்லிக்கு சென்ற விஜயகாந்த் பிரதமர் மோடியை சந்தித்த பின் விஜயகாந்த் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அந்நேரத்தில் ஜெயாடிவி நிருபர் கேள்வி கேட்ட போது விஜயகாந்த் திடீரென ஆவேசமுற்றார். தமிழகத்தை சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிருபரை 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க' விடுவேன் என மிரட்டினார். இந்த வீடியோவும், வார்த்தையும் வைரலானது.
அடிக்க மாட்டேன் வாங்க
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை, சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நட்பாக பேசிய வீடியோ வைரல் ஆனது.
அடிவாங்கிய விஜயகாந்த்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரான போது, போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தனர். அப்போது தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கூட்டத்தினரை அடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தினரை அடிக்கும் போது தவறுதலாக விஜயகாந்த் தலையிலும் ஒரு அடி விழுந்தது. இந்த வீடியோ வைரலானது.

ஆங்கிரி பேர்ட்
மனுசன் என்றால் கோபம் வரனும், கோவம் இருக்கற இடத்தில்தான் குணமிருக்கும் என்று தனது கோபங்களுக்கு அவ்வப்போது விளக்கம் வேறு கொடுத்து வருகிறார்.

பண்ருட்டி எம்.எல்.ஏவுக்கு சராமரி அடி
கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற விஜயகாந்த், வேன் டிரைவரை உதைத்ததோடு தனக்குப் பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் ஓங்கி 4 முறை சரமாரியாக அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபம் குறையலையே கேப்டன்
அரசியல்வாதிகளில் கோபக்கார தலைவர் என்று பெயரெடுத்தவர் விஜயகாந்த், அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் விஸ்வாமித்திரர் கோவிலில் யாகம் செய்தார். ஒருவாரம் யோகா பயிற்சி செய்து விட்டு நேற்றுதான் சென்னை திரும்பினார் இந்த நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏவை அடித்து பரபரப்பில் சிக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications