நகை, பணம் இல்லை... கோபத்தில் வீட்டைக் கொளுத்திய நெல்லை திருடன்!
நெல்லை: விலை மதிப்பான நகை, பணம் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் திருட வந்த வீட்டைத் திருடன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் பஞ்சாயத்து வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (40). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது கணவர் இறந்து விட, செல்வி தனது இரண்டு மகன்களுடன் அகஸ்தியர்புரத்தில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வியின் அடையகருங்குளம் வீட்டில் திருட முயற்சித்துள்ளார் மர்மநபர் ஒருவர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அவற்றில் பணம்,நகை ஏதாவது உள்ளதா என அவர் தேடியுள்ளார்.
ஆனால், எதிர்பார்த்தது போல் விலைமதிப்பான பொருள் எதுவும் திருடனுக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருடன் கோபத்தில் வீட்டிற்குள் தீயைக் கொளுத்தி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அதிகாலையில், வீட்டிற்குள் இருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தார், இது தொடர்பாக செல்விக்கு தகவலளித்துள்ளனர்.
விரைந்து வந்த செல்வி வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த துணி, டிவி, கம்யூட்டர், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், கணவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாக கண்ணீருடன் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகாரளித்துள்ளார் செல்வி.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள விக்கிரமசிங்கபுரம் போலீசார், திருடனைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications