உதயநிதி அவர்களே! பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம்தான்.. அண்ணாமலை பதிலடி
ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்பது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் எனும் பாதயாத்திரை திட்டத்தின் 2ஆம் கட்டத்தை தொடங்கியுள்ள அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த பயணத்தை அவர் முடிக்கிறார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவுக்கு பதிலடி கொடுப்பதுடன் அவர் பாஜகவின் 9ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுள்ள அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துகளுக்கு எல்லாம் அண்ணாமலை பதிலளித்தார். அவர் கூறுகையில் கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் நான் பூஜை செய்ய எதிர்பார்ப்பது தவறு. அது போல் நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை விட்டு செய்ய சொல்ல முடியாது.
பட்டியலினத்தவர்கள், பெண்கள் சில கோயில்களில் பூசாரியாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது. சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் வாக்குறுதி அளித்து தேர்தலை சந்திக்க தயாரா. ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் வாக்களிக்கவில்லை.
நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததே சனாதனம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவத்துள்ளார். ஆனால் பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம்தான். ஜனாதிபதி தேர்தலில் திமுகவினர் வாக்களித்தது யஷ்வந்த் சின்ஹா என்ற பிராமணருக்குத்தான் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் அவர் நெல்லையில் பேசுகையில் சனாதனத்தில் பாகுபாடு கிடையாது. இந்து மதத்தில் மட்டும்தான் மனிதனை கடவுள் என சொல்கிறோம். சனாதன தர்மத்தில் மட்டும்தான் அது சாத்தியம். விலங்குகளுக்கும் உணவு இருக்கிறது, செடிகளுக்கும் உணர்வு இருக்கிறது. அவற்றை துன்புறுத்தக் கூடாது என சொல்வதுதான் சனாதன தர்மம். சனாதனம் ஏற்றத் தாழ்வை கற்பிக்கவில்லை. மனிதர்கள்தான் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தினார்கள். அதை இன்றைக்கு மனிதர்களே சரி செய்கிறார்கள். இன்று உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என சொன்ன போது நான பொங்கினேன். அண்ணன் கிருஷ்ணசாமி பொங்கினார், நாளை உதயநிதி ஸ்டாலின் ஒரு வேளை இஸ்லாத்தையே வேரறுப்பேன் என சொன்னாலும் நான் பொங்குவேன், பாஜகவினரும் பொங்குவார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications