5ல் 4 பங்கை காணோம்.. அது உண்மை இல்லையாம்.. “4 மடங்கு வளர்ச்சி”.. அடடே.. அண்ணாமலை சொல்வதை பாருங்க!
சென்னை : சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல்குமார், 2019ல் இருந்த பாஜகவின் கட்டமைப்பில் இப்போது 20% தான் இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், பாஜகவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
பாஜகவின் 44-வது ஆண்டு தொடக்க விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவின் 44வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது சாதாரணமானது ஒன்று இல்லை, இது ஒரு வரலாறு.

பாரதிய ஜனதா கட்சியை துவங்கும்போது இரண்டு எம்பிக்கள் மட்டுமே பாஜகவிற்கு கிடைத்தது. நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் பேசும்போது காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து கேலியம், கிண்டலும் செய்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறி பாஜக இந்த 43 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. திமுகவை விட குறுகிய காலத்தில் பாஜக அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பிரதமர் மோடி பாஜகவின் இத்தகைய வளர்ச்சிக்கு தொண்டர்களின் உழைப்பு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினார். அது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். அதற்கு தொண்டர்கள் உழைப்பு அதிகமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், பாஜகவை பொருத்தவரை வருடத்தில் 365 நாட்களும் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கும் நாள் தான். மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை உலகிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்திய கட்சி இது. அரசியலை பொறுத்தவரை சித்தாந்தமாக செயல்பட வேண்டும். எனவே பாஜக அனைத்து நாட்களிலும் உறுப்பினர் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும். பாஜகவை பொறுத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது 4 மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்ததோடு, 2019ஆம் ஆண்டில் இருந்த பாஜக கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவில் உறுப்பினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications