மவுலிவாக்கத்தில் உள்ள 2வது கட்டடத்தையும் இடிக்க வேண்டும்- ஆய்வுக் குழு அறிக்கை
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இரண்டாவதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பினையும் இடிக்க ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஸ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தால் 11 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தது.
இந்தப் பணியில் தமிழகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி திடீரென 11 மாடி கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் இறந்தனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர், கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியான ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. விபத்து குறித்த அறிக்கையையும் பெற்றது.
மேலும், இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடமும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் நிலவியதால், அப்பகுதி அபாயகரமான பகுதி என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள 11 மாடிக் கட்டடத்தை இடிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து கட்டடத்தை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் அந்தக் கட்டடத்தை இடிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதையேற்று, அந்தக் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து வரும் 18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நிபுணர்கள் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆராய வழக்கறிஞர்கள் அசோக்குமார் குப்தா, ஐ.ஐ.டி உதவி பேராசிரியர் சேஷாங், தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழக பொது மேலாளர் எல்.பி.சிங் ஆகியோர் மவுலிவாக்கத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் 11 மாடி கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தனர். கட்டடம் குறித்த இடைக்கால அறிக்கையை அவர்கள் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
அந்த இடைக்கால அறிக்கையில், இடிந்து விழுந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் 50 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் இடிக்க மத்திய ஆய்வுக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் முழுமையான ஆய்வுப் பணிகளை முடிக்க 2 மாத காலம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications