3, 4வது அணு உலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்... ஸ்டாலின் ஆதரவைக் கோரினார் உதயகுமார்!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, கூடன்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர்.
சுப.உதயகுமார் தலைமையிலான குழு அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்தப் போராட்டக் குழுவினர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

பிரச்சினைகள்...
அந்தச் சந்திப்பின் போது, கூடங்குளத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட முதலாவது மற்றும் 2வது அணு உலைகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்தார்.

கோரிக்கை...
இந்த நிலையில், தற்போது அமைக்கப்படவுள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகளால் மேலும் பல பிரச்சினைகள் உண்டாகும் என எடுத்துக்கூறிய அவர்கள், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

ஆதரவு...
மேலும், அணுஉலைகளுக்கு எதிரான தங்களது அமைப்பின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

முதல்வரைச் சந்திக்க திட்டம்...
ஸ்டாலினைச் சந்தித்ததற்குப் பின், தங்களது போராட்டத்திற்காக, பல்வேறு கட்சிகளிடமும் ஆதரவு திரட்டி வருவதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications