ஆம் ஆத்மியில் இணைந்தார் கூடங்குளம் புஷ்பராயன்
நெல்லை: கட்சியில் அணு உலை இயக்கத்தை சார்ந்த புஷ்ப ராயன் ஆம் ஆத்மி இணைந்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக, கூடங்குளம் அணுஉலைப் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக, ஏற்கெனவே நண்பர்கள் சுப. உதயகுமார் மற்றும் திரு.மை.பா ஜேசுராஜ் இருவரும், அவர்களோடு இடிந்தகரையைச் சார்ந்த சில தோழர்களும் கடந்த 28.02.2014 அன்று மாலை இடிந்தகரையில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தேர்தல் பரப்புரைக் குழு பொறுப்பாளர் திரு. டேவிட் பரூண் குமார் தாமஸ் அவர்கள் தலைமையில் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தார்கள்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, வெள்ளிக்கிழமையன்று நான் தூத்துக்குடி மாவட்ட சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களோடு பலகட்டப்பேச்சுவார்த்தைகள் நடத்தி, எனது மனதில் இருந்த அச்சங்களைப் போக்கி, எனது ஆதங்கங்களைப் கலந்துபேசி, அவர்களின் தெளிவான புரிதலோடு, அவர்களிடம் முழுமையாக மனம்விட்டு பேசி, அவர்களின் முழு ஒத்துழைப்போடு, அவர்களின் முழு ஆதரவின் பேரிலும், தூத்துக்குடி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர்களின் முழு ஒத்துழைப்பு மற்றும் விருப்பத்தின் பேரிலும் நான் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினராக நான் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து, இணையதள வழியாக நான் ஆம் ஆத்மி கட்சியில் என்னை கட்சியில் இணைத்துள்ளேன். (எனது உறுப்பினர் எண்- 6000252635)
இனி, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட மற்றும் தமிழகத் தலைநகர் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் தலைநகரில் இயங்கும் கட்சி மேலிடத்தின் ஆணைப்படி நான் எனக்குக் கொடுக்கப்படும் பணிகளை பணிவோடு நிறைவேற்றிட, மக்கள் பணியை சாதி, மத, இன அடையாளங்களைக் கடந்து, மானுட உரிமைகள் போற்றப்படுகின்ற அளவில், அவற்றை மாண்போடு செவ்வனே செய்திட, அவர்களின் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன்.
தமிழின உரிமைகளுக்காக, இயற்கைவள சூழல்பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த, தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்திட, பெண்களின் விடுதலைப் பணியில் ஒத்துழைக்க, அவர்களோடு உடனிருக்க, சிறுபான்மைமக்களின் உரிமைகளை பாதுகாக்க என்றும் அயராது பாடுபடவிழைந்து நிற்கிறேன் இவ்வாறு புஷ்பராயன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.