1000 நாட்களை நிறைவு செய்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்: தீர்வு எப்போது?
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் ஆயிரமாவது நாளை கடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை புனித லூர்து தேவாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் கடந்த 2011ம் ஆண்டு தங்களின் போராட்டத்தை தொடங்கினர்.
கூடங்குளம் அணு உலையை அகற்றவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலை நிலநடுக்கதால் பாதிக்கப்பட்டு கதிரிவீச்சு வெளியேறியதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அறப்போராட்டம் இடிந்தகரையில் துவங்கியது.

தொடர் போராட்டம்
உண்ணாவிரதம், மணலில் புதையுண்டு போராட்டம், அணு உலை முற்றுகை என இடிந்தகரையில் தொடர் போராட்டம் கடந்த மூன்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

பெருகிய ஆதரவு
2011 ஆகஸ்ட்டில் இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் துவங்கியதில் இருந்து அரசியல் கட்சிகளின் ஆதரவு போராட்டத்திற்கு பெருகி வந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தன.

349 வழக்குகள்
அறவழியில் போராடும் இயக்கதினரை அடக்குவது அறியாமல் போலீசாரும் மீனவ கிராமமான இடிந்தகரைக்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினர். போராட்டக்காரகளுக்கு எதிராக 349 வழக்குகளை பதிவு செய்த போலீசார் ஏதோ காரணத்தால் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

தொடங்கிய மின் உற்பத்தி
ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட 1000 மெ.வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அணுஉலைகளில் முதல் அணுஉலையில் இதுவரை 900 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டக்குழுவினர்
நீண்ட நாட்களாக அறவழியில் நடக்கும் இந்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரமாவது நாளை எட்டியது. 1000-வது நாளை ஒட்டி இடிந்தகரையில் நடந்த கூட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எம்.பி.ஜேசுராஜ், எம்.புஷ்பராயன், ஆர்.எஸ்.முகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். அணு உலை எதிர்ப்பாளர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டம் தொடரும்
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மத்திய மாநில அரசுகளும், உச்ச நீதிமன்றமும் தயாராக இல்லாத காரணத்தால் தங்களது போராட்டம் அணுஉலை திட்டம் கைவிடப்படும் வரை தொடரும் என தெரிவித்தனர்.

மூடும்வரை போராடுவோம்
கூடங்குளம் அணுஉலை முற்றிலுமாக மூடப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் பேரியக்கத்தின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான எஸ்.பி.உதயகுமார்.












Click it and Unblock the Notifications