83 வயதில் "மக்களின் ஜனாதிபதி" கலாம்...!
இன்று மாணவர் தினம் - 83 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் நாயகன் "அப்துல் கலாம்"!
சென்னை: இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும் பின்னர் குடியரசுத்தலைவராகவும் பதவி வகித்த ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 83 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவி வகித்தவர் கலாம்.
இந்திய ஏவுகணை திட்ட நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்தவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்.

அப்துல்கலாமின் பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழகத்தின், ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஏழ்மையிலும் கல்வி:
அப்துல் கலாம் ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் இளம் வயதிலேயே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.

ஆராய்ச்சி வாழ்க்கை:
அதன்பின்னர் பல்வேறு தடைகளுக்கு இடையில் கல்லூரிப்படிப்பை முடித்து 1960 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

செயற்கைகோள் ஏவுதல்:
பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், SLV செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

இந்தியாவின் சாதனை:
1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதில் கலாம் முக்கியப் பங்கு வகித்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. .

பொக்ரான் சாதனை:
அதேபோல இந்தியாவின் 2வது பொக்ரான் அணுகுண்டு சோதனையிலும் கலாமின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

11 ஆவது குடியரசுத்தலைவர்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 இல் பதவியேற்றார்.

இளைஞர்களின் வழிகாட்டி:
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
"தன்னுடைய குழந்தை அழவதைப் பார்த்து, தாய் சிரிக்கும் நிமிடம், குழந்தையின் பிறந்தநாள்" என்று கூறிய ஏ.பி.ஜே அப்துல்கலாமின் பிறந்தநாள் "மாணவர் தினம்" என்று அனுசரிக்கப்படுகின்றது. உலகம் போற்றும் அத்தலைவரின் பிறந்த நாளிற்கு நாமும் வாழ்த்துக்கள் கூறுவோம்!












Click it and Unblock the Notifications