போட்ட காசெல்லாம் போச்சே.. ரகசியமாக புலம்பும் + புழுங்கும் அரவக்குறிச்சி திமுக- அதிமுக!
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தேர்தலுக்காக செலவழித்த பணமெல்லாம் வீணாகப் போச்சே என்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனராம். அவர்கள் செலவழித்த காசு என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட செலவழித்தது வீணாகி விட்டதாக அவர்கள் சோகத்தில் உள்ளனராம்.
திமுக தரப்பில் மீண்டும் கே.சி. பழனிச்சாமியே நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேசமயம், மீண்டும் செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா சீட் தருவாரா என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.
இரு வேட்பாளர்களும் கிட்டத்தட்ட ரூ. 100 கோடிக்கும் மேல் செலவழித்துள்ளதாக தொகுதிக்குள் பேசிக் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலான பணம் வாக்காளர்களுக்குத் தரப்பட்ட பணம் என்றும் சொல்லப்படுகிறது.

பயில்வான்களின் மோதல்
அரவக்குறிச்சி தேர்தலில் இரு பெரும் பயில்வான்களின் மோதலாகவே தேர்தல் களம் காணப்பட்டது. அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும் மோதினர். இருவரும் பணபலம், ஆள் பலத்தில் பெரும் வஸ்தாதுகள் என்பதால் ஆரம்பத்திலிருந்தே இங்கு பணப் புழக்கம் ஓவராகவே காணப்பட்டது.

பணக் குவியல்
தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் பணம் சிக்கியது. அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் மிகப் பெரிய அளவில் பணம் சிக்கியது. .ரூ. 5 கோடி வரை அவரது கிட்டங்கியிலிருந்து அள்ளினர்.

கேசிபி வீட்டில் ரூ. 2 கோடி
அதேபோல திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மற்றும் அவரது மகன் சிவராமன் வீடுகளில் நடந்த ரெய்டில் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி அளவில் பணம் சிக்கியது.

வாக்காளர்களுக்கு தாராள பண விநியோகம்
மேலும் வாக்காள்களுக்கு இரு தரப்பும் தாராளமாக பணத்தை வாரியிறைத்து வந்தது. ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் கொடுப்பதாகவும் பரபரப்பு கிளம்பியது.

நூற்றுக்கணக்கில் புகார்கள்
மேலும் இரு வேட்பாளர்கள் மீதும் சரமாரியாக புகார்களும் குவிந்தன. வழக்கமாக அதிமுக வேட்பாளர்கள் மீதுதான் அதிகமாக புகார்கள் குவியும். ஆனால் தமிழகத்திலேயே கே.சி.பழனிச்சாமி ஒருவர்தான் அதிக அளவிலான புகார்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் ஆவார். இரு வேட்பாளர்கள் மீதும் 100க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன.

தேர்தல் ரத்து
இந்த நிலையில் புகார்களைப் பரிசீலித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் ஒரு வழியாக அரவக்குறிச்சியில் தேர்தலை தள்ளி வைத்தது. தற்போது அதை ரத்தும் செய்து விட்டது. புதிய தேதியில் புதிய வேட்பாளர்களுடன் தேர்தல் நடைபெறவுள்ளது.

பல நூறு கோடி இருக்கும்
இரு வேட்பாளர்களும் செய்த தேர்தல் செலவு குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இருவரும் தேர்தல் செலவுக்காக மட்டும் ரூ. 150 கோடி வரை வாரியிறைத்திருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேசமயம் வாக்காளர்களுக்குக் கொடுத்த பணம், இன்ன பிற தேர்தல் செலவு என்று பார்த்தால் பல நூறு கோடிகளைத் தாண்டும் என்றும் சிலர் கிசுகிசுக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்...!












Click it and Unblock the Notifications