கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்ற ஐ.பெரியசாமி மகள் திருச்சி சிறையில் அடைப்பு
மதுரை: மதுரை ரியல்எஸ்டேட் அதிபர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை சின்னசொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் ஜமால்முகமது (வயது 61). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் கொலை செய்யப்பட்டு கொடைக்கானல் மலையில் வீசப்பட்டார். இது தொடர்பாக சித்திக், சங்கர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மேலும் மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகளான இந்திரா (35), அவரது சித்தி உமா ராணி (51), இவரது கணவர் பழனிவேல் (55) ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் 23-ஆம்தேதி கைது செய்து மதுரை ஜே.எம்.-2 நீதிமன்ற நீதிபதி திரிவேணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது பழனிவேலை மதுரை மத்திய சிறையிலும், இந்திரா மற்றும் உமாராணியை திருச்சி பெண்கள் கிளை சிறையிலும் 7-ந் தேதியான இன்று வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தங்களுக்கு நெஞ்சு வலிப்பதாக உமாராணியும், இந்திராவும் தெரிவித்ததால் அவர்கள் 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கடந்த 13 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று மாலை சிகிச்சை முடிந்ததையடுத்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அவர்கள் 2 பேரும் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் இன்று பிற்பகல் மதுரை நீதிமன்றத்தில் 2 பேரும் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications