ஆந்திராவில் அதிகாலையில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் இரவில் விடுதலை
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் ரேணிகுண்டா வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
Recommended Video

ரேணிகுண்டா: செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் ரேணிகுண்டா வட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆந்திரா மாநிலத்தில், தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி, அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.

நேற்று நள்ளிரவு 3 மணியளவில், திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் 84 தமிழர்களைச் செம்மர கடத்தல்தடுப்பு காவல்துறை கைது செய்துள்ளனர். லாரியில் சென்ற தமிழர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்பு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் செம்மரம் வெட்ட ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், அனைவரையும் கைது செய்து ஆஞ்சநேயபுரம் சோதனைசாவடியிலேயே தங்கவைத்து விசாரித்தனர்.
84 தமிழர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பது குறித்து திருப்பதி வனத்துறையினர் செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ரவிசங்கர், கைதான 84 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்றார். கைதானவர்களில் 42 பேர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள், 42 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் வட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் எஸ்.பி ரவிசங்கர் கூறினார்.
இந்தநிலையில் ரேணிகுண்டா வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தப்பட்ட 84 பேரும் பிணைத்தொகை செலுத்தி விடுதலை பெற்றனர்.












Click it and Unblock the Notifications