தாரை தப்பட்டை.. கரகாட்டம்... குத்தாட்டம்.. ஆர்.கே. நகரில் களைகட்டும் பிரச்சாரம்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தாரை தப்பட்டை, கரகாட்டம், குத்தாட்டம் என களைகட்டியுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடு பிடித்து ஜோராக நடைபெற்று வருகிறது
தமிழக முதல்வராகவும், ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணம் ஆர்.கே. நகர் தொகுதியை காலியானதாக அறிவிக்கச் செய்தது.
இந்தத் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி, சிபிஎம், பாஜக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடும் போட்டி
அதிமுக இரண்டாக உடைந்திருப்பதால், சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தங்களது பலத்தை நிரூபிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சின்னத்தை கேட்டுப் பெறுவதில் இருந்து களத்தில் நிகழும் பிரச்சாரம் வரை அனைத்திலும் இருதரப்பும் அடித்துக் கொண்டு செத்து வருகின்றன.

திமுக
அதே போன்றே திமுகவும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பெரும் பிரயத்தனங்களை செய்து வருகிறது. அதற்காக பத்திரிகையாளரும் மண்ணின் மைந்தனாகவும் உள்ள மருது கணேஷை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

களைகட்டும் பிரச்சாரம்
காலையிலேயே ஆர்.கே. நகர் தொகுதியில் ஆஜராகிவிடும் வேட்பாளர்களும் அவர்களது கட்சியினரும் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மக்களை ஈர்ப்பதற்கான வகை வகையான கலை வடிவங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

நாட்டுப்புறக் கலை
இந்த பிரச்சாரத்தில் திமுகவை பொறுத்தவரை நாட்டுப் புறக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்களை வரவழைத்து பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகிறது. அவர்கள் கிராமப்புற நடனங்களை ஆடி மக்களை கவர்ந்து வருகின்றனர்.

குத்தாட்டம்
அதிமுக அம்மா கட்சியைப் பொறுத்தவரை குத்தாட்டம் ஃபேமஸ். எனவே, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அக்கட்சிப் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டு கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாரை தப்பட்டை
அதே போன்று பிரச்சாரத்தில் தாரை தப்படை, பறை என பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்கப்பட்டு வெகு விமர்சையாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் வேட்பாளர்கள். இதனால் ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்றாக பொழுது போகிறதாம்.

பிரச்சாரத்தில் சிறுவர்கள்
பறை இசைக் கருவியை வாசிக்க சிறுவர்களையும் இந்தத் தொகுதியில் பயன்படுத்தப்படுகின்றனர். ஆர். கே. நகர் தொகுதியில் அடித்தள மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள சிறுவர்கள் தனக்கு தெரிந்த கலையை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

கொண்டாட்டம்
கடும் வெயிலையும் பொருட்படுத்தால், இப்படி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டியிருக்கிறது ஆர்.கே. நகர் தொகுதி. என்றாலும் இன்னும் 10 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த நாடகத்தின் முடிவுதான் முக்கியம் என்பதால் வேட்பாளர்கள் அனைவருமே பதற்றத்தில்தான் உள்ளனர்.












Click it and Unblock the Notifications