சசிகலா பிரமாண பத்திரம் தொடர்பாக வந்த தகவல்கள் பொய்யானவை- ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்
சசிகலா பிரமாண பத்திரம் தொடர்பாக வந்த தகவல்கள் பொய்யானவை என்று ஆறுமுகசாமி ஆணையம் விளக்கமளித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா வாக்குமூலம் அளித்ததாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தகவல்களில் 70 சதவீதம் பொய்யானவை என்று ஆறுமுகசாமி ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு அது பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மறுத்துவர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.
நடந்தது என்ன
ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை நடந்தது என்ன என்பது குறித்து விவரங்களை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
மயங்கினார் ஜெ
சசிகலா பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த தகவல்களை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது. அதில் பாத்ரூமில் தவறி விழுந்த ஜெயலலிதா, சசியிடம் உதவி கேட்டதாகவும் அவரை கைதாங்கலாக படுக்கைக்கு கொண்டு செல்ல உதவியதாகவும் அப்போது அவர் மயங்கியதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல்கள்
அதுபோல் ஜெயலலிதாவுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டபோது போயஸ் தோட்டத்துக்கு எத்தனை ஆம்புலன்ஸ்கள் வந்தன, மயங்கிய ஜெ.வுக்கு சுயநினைவு திரும்பியதாகவும் சசிகலா குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின.
70 சதவீதம் உண்மை இல்லை
ஆனால் இந்த தகவல்களை ஆறுமுகசாமி ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்களில் 70 சதவீதம் உண்மை இல்லை.
காவிரி கூட்டம் வாக்குமூலத்தில் இல்லை
வெளியான தகவல்கள் எதுவும் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இல்லை. செப் 27-இல் காவிரி பற்றி ஜெ. ஆலோசனை நடத்திய விவரமும் சசி வாக்குமூலத்தில் இல்லை.
சாதகமான தகவல்கள்
ஜெயலலிதாவை ஓபிஎஸ், விஜயபாஸ்கர் நீலோபர் கபீல் சந்தித்ததாக கூறப்படுவதும் வாக்குமூலத்தில் இல்லை. அவருக்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படும் தகவலும் தவறு. சசி தரப்புக்கு சாதகமாகவே ஆங்கில் நாளிதழில் தகவல்கள் கூறப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கமளித்துள்ளது.