ஜெ., மரண மர்மம்... ஆறுமுகசாமியின் 'ஆபரேசன் வேதா நிலையம்' - கிலியில் சசி குடும்பம்
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் இருந்து விசாரணையை ஆறுமுகசாமி தொடங்குவதால் சசிகலா குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை போயஸ்கார்டனில் அமைந்துள்ள வேதா நிலையத்தில் இருந்து தொடங்கப்போவதாக ஆறுமுகசாமி அறிவித்துள்ளது சசி குடும்பத்தினரை கிலியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் வேதாநிலையத்தில் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு நடத்தப்போகும் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா உபயோகப்படுத்திய படுக்கை அறைவரை சென்று அவர் ஆய்வு நடத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன என்று போயஸ் கார்டன் வீட்டில் நீண்ட காலமாக வேலை செய்து வரும் ராஜம்மா வாயை திறந்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். அதே போல அன்றைய தினத்தில் போயஸ் கார்டன் வீட்டில் வசித்தவர்களும் உண்மையை சொல்ல வேண்டும் என்று நீதிபதி மட்டுமல்ல அதிமுக தொண்டர்களும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

மர்மத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

போயஸ்கார்டனில் விசாரணை
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின்பேரில், விசாரணை அறைக்குள் நடக்கும் உரையாடல்கள் வெளியில் கேட்காத அளவுக்கு, திரையரங்குகளில் உள்ள கட்டமைப்புபோல அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் தனது விசாரணையை போயஸ் கார்டனில் இருந்து தொடங்கப் போகிறார் ஆறுமுகசாமி.

44 ஆண்டுகாலமாக வசித்த ஜெ
சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே போயஸ்கார்டன் என்றாலே நினைவுக்கு வருபவர் ஜெயலலிதாதான். கடந்த 44 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார் ஜெயலலிதாதான். அவரது வீட்டிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் சென்றுள்ளனர்.

1972ல் வேதா நிலையத்தில் குடியேறிய ஜெ.,
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்' கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15ஆம் தேதி நடந்துள்ளது. இந்த வீட்டில் கிரகப்பிரவேச நிகழ்ச்சி அழைப்பிதல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அடையாளம் இழந்த போயஸ்கார்டன்
இப்போதும் போயஸ்கார்டனில் பிரபலங்கள் வசித்தாலும் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அந்த பரபரப்பை இழந்து விட்டது. இந்த சூழ்நிலையில்தான் போயஸ் கார்டனில் இருந்து விசாரணையைத் தொடங்கப் போவதாக நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். ஏனெனில் அங்கிருந்து விசாரணையை தொடங்கினால்தால், ஜெயலலிதா
அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு வேதா நிலையத்தில் நடந்தது என்ன என்பது தெரியவரும்.

பணியாளர்களிடம் விசாரணை
போயஸ் கார்டனில் தற்போது சில பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் பலரை வேலைக்கு வைத்தவரே சசிகலாதான். அதனால், தங்களுக்கு எதிராக எதுவுமே யாரும் எதுவும் சொல்லிவிட மாட்டார்கள் என்பது சசி குடும்பத்தின் நம்பிக்கை.

ராஜம்மா பேசுவாரா?
வேதா நிலையத்தில் நடத்தப்படும் சாரணையில் எந்த எதிர்மறையான தகவலும் வெளியே போகாது என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தாலும், ராஜம்மா, தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்பது அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆபரேசன் ஆறுமுகசாமி
விசாரணைக்காக போயஸ் கார்டன் செல்லும் நீதிபதி ஆறுமுகசாமி, போயஸ் கார்டனில் ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்வார் என்றும் ஜெயலலிதா தங்கியிருந்த பெட்ரூம் வரை சென்று அவர் ஆய்வு நடத்தப் போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஆறுமுகசாமியின் ஆபரேசனை நினைத்து சசி குடும்பத்தினர் ஆடிப்போயுள்ளது என்னவோ உண்மைதானாம்.












Click it and Unblock the Notifications