அதிமுக நேர்காணல்... இன்று 7 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஜெ. அழைப்பு
சென்னை: 7 மாவட்ட அதிமுகவினருடன் ஜெயலலிதா இன்று நேர்காணல் நடத்துகிறார். நேற்று விடுபட்ட வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினர் உடன் நேர்காணல் நடத்த உள்ளார். மேலும் விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தினரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் வேட்பாளர் தேர்வுக்கான 2ம் கட்ட நேர்காணல் நேற்று திடீரென தொடங்கியது. 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகத்தில் 17,698 பேரும், புதுச்சேரியில் 332 பேரும், கேரளாவில் 208 பேரும் விருப்ப மனு அளித்திருந்தனர். கடந்த 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் திடீரென வேட்பாளர் நேர்காணல் நடந்தது. இதில், 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அதன்பிறகு நேர்காணல் தொடர்ந்து நடத்தப்படவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக் குடி, ராமநாதபுரம். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்திருந்தவர்கள், நேர்காணலுக்கு வருமாறு ஞாயிறன்று இரவு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அவசரமாக புறப்பட்டு நேற்று காலை சென்னை வந்தனர்.
காலை 10 மணி முதலே போயஸ் தோட்ட பகுதியில் விருப்ப மனு அளித்தவர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் முதல்வர் இல்லத்துக்குள் அனுப்பி வைத்தனர். ஆனால், முதல்வர் இல்லத்தில் உள்ளவர்கள், பிற்பகல் 1.30 மணிக்குதான் நேர்காணல் எனவே, அப்போது வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பினர். அதனால் அவர்கள், பகல் 1 மணி வரை அங்கேயே காத்திருந்தனர்.
அதன்பின், 1.20 மணிக்கு விருப்ப மனு அளித்திருந்தவர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின்போது, அமைச்சர் வைத்திலிங்கம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் முதல்வருடன் இருந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், சில தொகுதிகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் அழைக்கப்பட் டிருந்தனர். சில தொகுதிகளுக்கு 3 பேர், சிலவற்றுக்கு 2 அல்லது ஒருவர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
இன்றைய நேர்காணல்
நேரமின்மை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களுக்கான நேர்காணல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் நேர்காணல் தொடங்கியது.
7 மாவட்டங்கள்
நேற்று விடுபட்ட வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினர் உடன் நேர்காணல் நடத்த உள்ளார். மேலும் விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தினரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
5 நாட்களுக்கு நேர்காணல்
இந்த 2ம் கட்ட நேர்காணல் மேலும் 5 நாட்களுக்கு நடக்கும் என அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருந்தனர்.
பெண் வேட்பாளர்கள்
40 சதவீதம் பெண்கள் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களிடம் கல்வித்தகுதி, தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு, செல்வாக்கு ஆகியவை குறித்து ஜெயலலிதா கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது.