பெரியார் சிலையை சிதைப்பதால் அவரின் சித்தாந்தத்தை உடைத்து விடமுடியாது: தா.பாண்டியன்
பெரியார் சிலையை சிதைப்பதால் அவரின் சித்தாந்தத்தை உடைத்து விடமுடியாது என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடலூர்: பெரியார் சிலையை சிதைப்பதால் அவரின் சித்தாந்தத்தை உடைத்து விடமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பாக 24வது மாநிலமாநாட்டு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளையும், திராவிர இயக்கங்களையும் ஒழிக்க சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடித்து மதச்சார்பற்ற ஆட்சியை இந்த நாடு முழுவதும் நிறுவ வேண்டியுள்ளது. அதற்கு முதற்கட்டமாக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகளை கம்யூனிஸ்ட்கள் தற்போது செய்ய வேண்டியுள்ளது என்றார்.
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அதனைப் பாதுகாத்து தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளது என்று நல்லக்கண்ணு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசுகையில், தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட பெரியாரின் சிலை தமிழகத்திலேயே உடைக்கப்படுகிறது. சிலைகளை உடைத்தால் சித்தாந்தத்தை உடைத்துவிடலாம் என்று நினைப்பது சரியானது அல்ல என்று குறிப்பிட்டார்.
மேலும், ராமராஜ்ய ரதயாத்திரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமர் கோவில் என்று சொல்லி, சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தை தூண்டுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி, வருகிற 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கத் தவறும் மத்திய மாநில அரசுகளை அகற்றும் போராட்டத்திற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.