இமேஜ் பில்டப்புக்காக தமது வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக பிரமுகர் கைது
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வடவள்ளியில் தமது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடகமாடிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராமநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியை சேர்ந்தவர் ராமநாதன். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் டமார் என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர் சென்று பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். நரேந்திர மோடி திருச்சி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஒருசிலர் போஸ்டர்களை ஒட்டினர், அதுதொடர்பாக ராமநாதன் போலீசில் புகார் செய்து இருந்தார். எனவே அவர்கள் ராமநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இருப்பினும் ராமநாதன் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கட்சியில் தமக்கு குறைந்துவிட்ட செல்வாக்கை அதிகரிக்க தாமே தமது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியதை அவர் ஒப்புக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மதகலவரத்தை தூண்டுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒரு பிரிவு ஜாமீனில் வெளியே வரமுடியாதது ஆகும்.












Click it and Unblock the Notifications