ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம்: சேலத்தில் போலிஸ் குவிப்பு
சேலம்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சேலத்தில் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் அப்சரா இறக்கம் பகுதியில் உள்ள யானை மண்டபத்தில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணியளவில் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள சந்திர மஹால் திருமண மண்டபத்தில் ஆடிட்டர் ரமேஷின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்களின் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
சென்னையில் முக்கிய சாலைகளில் ஆடிட்டர் ரமேசின் உருவப்படத்தில் மாலை அணிவித்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications