ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 3 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல்- சிபிசிஐடி
சேலம்: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் சம்பந்தபட்ட மூன்று பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க சிபிசிஐடி ஏற்பாடு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் எண் 4 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்றும் விசாரணை நடந்தது. இதில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து ஆஜரானார்கள்.
கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் குற்ற நகல் இன்று வழங்க சேலம் சிபிசிஐடி போலீசார் தயார் செய்து எடுத்து வந்து இருந்தனர். மொத்தம் 900 பக்கங்களுடன் இந்த குற்ற பத்திரிக்கை நகல் தயார் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் போலீஸ் பக்ருதீன், பன்னாஇஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை போதிய போலீஸ் இல்லாததாலும், தேர்தல் நேரம் என்பதாலும் வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் அழைத்து வர இயலவில்லை. வழக்கை மாஜிஸ்திரேட்டு விஜலட்சுமி விசாரித்தார்.