காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் பலி
மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் இன்று உயிரிழந்தார்.
சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் மணியனூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). ஆட்டோ டிரைவரான இவர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தினால் கடும் விரக்தியில் இருந்த பிரபு, இந்த விவகாரத்தில் துரோகம் செய்த பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற கருத்தை கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் 31-ந் தேதி செவ்வாய்ப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்டில் பிரபு, எலி மருந்து விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் பிரபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரபு பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து மனைவி சுமதி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இறப்பதற்கு முன்பு பிரபு நேற்றிரவு உருக்கமாக பேசியது வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தீர்ப்பு வெளியான 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு பல அழுத்தங்கள் கொடுத்தும் எந்த ரெஸ்பான்சும் இல்லை.
தமிழகத்தில் உள்ள பி.ஜே.பி. தொண்டர்களுக்காகவும் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறோம்.
பிரதமர் மோடி விரைவில் தமிழகத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தமிழக மக்களுக்காக எனது உயிரை தியாகம் செய்கிறேன். உண்மையுள்ள தமிழன், ஜெய்ஹிந்த் என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் பிரபுவின் மரணம் குறித்து, அவரது உறவினர்கள் பேசியபோது,
யாராக இருந்தாலும், விஷம் குடித்த 3 மணி நேரத்தில் குடலை சுத்தம் செய்து உயிரை காப்பாற்றி விடலாம். ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் மருந்துகள் சரியாக இல்லாததால், பிரபுவின் குடல் சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டினர். பிரபுவின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வெளியிலிருந்து 4 நாட்களாக வாங்கி கொடுத்தும், உயிரை காப்பாற்றமுடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications