சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநர் கொலை: உறவினர்கள் போராட்டம்
சென்னை: சென்னை அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாத்தநல்லூரில் இந்தத் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
பெருமாத்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரதாப். இவர் சனிக்கிழமை அதிகாலை வழக்கம்போல் தனது ஆட்டோவில் தாம்பரத்திற்கு புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்தில், அவரது ஆட்டோ மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த பிரதாப், தப்பியோடினார். அப்போது அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. உயிர் பிரிந்த நிலையிலும் திருப்பியடையாத அந்த கும்பல், பிரதாப்பின் முகத்தை அரிவாளால் வெட்டி முழுமையாக சிதைத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
முன்விரோதத்தின் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரதாப்பை கொலை செய்த நபர்களை உடனே கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இறந்த பிரதாப் உடலை வைத்துக்கொண்டு , அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். கொலையாளிகள் யார் என்று கண்டுபிடித்து, அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.