நடந்த சென்ற பெண் என்ஜீனியரிடம் சங்கிலி பறித்த ஆட்டோ டிரைவர்.. பொதுமக்கள் தர்ம அடி!
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் தனியாக நடந்து சென்ற பெண் பொறியாளரிடம் தங்கச் சங்கிலியை பறித்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நேருநகர் சுப்பிரமணியன் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சித்ரா. கம்ப்யூட்டர் என்ஜீனியர். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் வேலை முடிந்தவுடன் மின்சார ரயிலில் குரோம்பேட்டை வந்தார். அங்கு இருந்து வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றார்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று திடீரென அவரது அருகே வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய டிரைவர், திடீரென சித்ரா அணிந்து இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பி ஓடினார்.
உடனே அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பொதுமக்களில் சிலர், ஆட்டோவை விரட்டிப் பிடித்தனர். பின்னர் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் அவரை சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர், தாம்பரம் மண்ணிவாக்கம் கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.
அவர், தேனாம்பேட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். என்ஜீனியர் சித்ரா தனியாக நடந்து சென்றதை பார்த்து அவரது நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாரிடமும் வழிப்பறியில் ஈடுபட்டாரா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications