கடும் எச்சரிக்கை எதிரொலி... கோபாலபுரத்தில் மு.க.அழகிரி - கருணாநிதியை சந்திக்க மறுப்பு!!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. அழகிரி ஆதரவாளர்களால் மதுரை திமுக தற்போது பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அழகிரியின் பிறந்த நாள் வருகிற 30ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் போரில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் ஒட்டி வந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில், தேமுதிகவை நான் ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை, விஜயகாந்த்தை தலைவராகவே ஏற்கவில்லை. தேமுதிகவை கூட்டணியில் திமுக சேர்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
மேலும் அழகிரி ஆதரவாளர்கள் தயாரித்த, ஒட்டிய போஸ்டர்களும் திமுக தலைமைக்கு எரிச்சலைக் கொடுத்தது. தேமுதிக கூட்டணிக்காக திமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அழகிரியின் போக்கு திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்தது.
இதையடுத்து முதலில் மதுரை மாவட்ட திமுகவை அதிரடியாக கலைத்தார் கருணாநிதி. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி அழகிரிக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்து, அவரை கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு நேற்று மு.க.அழகிரி சென்றார். ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லை. அழகிரி தமது தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்துப் பேசினார்.
அப்போது வீட்டின் மாடியில் இருந்த கருணாநிதி மேலே வருமாறு அழைத்தும் அழகிரி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அழகிரியின் மனைவி காந்தி, மகள் வெண்ணிலா, அவரது கணவர் வெங்கடேஷ், மகன் துரை தயாநிதி ஆகியோர் மட்டுமே கருணாநிதியை சந்தித்து பேசியதாக தெரிகிறது.
மாலையில் மு.க.அழகிரியின் மற்றொரு மகளான அமெரிக்காவில் இருக்கும் அஞ்சு கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்து பேசினார்.