"ஸ்டாலின் என்று சொன்னதும் உங்கள் மனதில் சட்டென்று தோன்றுவது?.. "
சென்னை: அரசியலில் மாற்றம் ஏற்படலாம். உண்மையில் அது ஒரு சாக்கடை. எனவே அதில் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்துள்ளார். அதில் திமகவுடனானன தனது பிரச்சினை, பாஜக கூட்டணிக்கு கொடுத்த ஆதரவு உள்ளி்ட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
அழகிரி கொடுத்த பேட்டியிலிருந்து...
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லையா?
இல்லை. எனக்கு கலைஞர் ஒருவர்தான் தலைவர். கட்சியை காப்பாற்ற வேண்டும். அதுதான் என் ஆசை.
கட்சியை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
அவர்கள்தான் காப்பாற்ற வேண்டும். நியாயம் கேட்கப்போன என் மீதே நடவடிக்கை எடுக்கிறார்கள்.
நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்..
கட்சியை காப்பாற்ற நினைக்கும் நீங்கள் ஏன் திமுகவை மூன்றாவது, நாலாவது இடத்திற்கு தள்ளவேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசுகிறீர்கள்?.. என்னை பலவீனப்படுத்தப்பார்க்கிறார்கள். அதனால் நான் திமுகவை பலவீனப்படுத்தப் பார்க்கிறேன். எனக்கு பொறுப்பு கொடுத்துவிட்டு அவர்களாகவே என்னைக் கேட்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதனல் நான், கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். தலைவர்தான் அதை வெளியிடாமல் இருந்தார்.
விஜயகாந்தை விமர்சித்தது ஏன்?
தென் மண்டல அமைப்புச்செயலாளராக இருந்தேனே தவிர, கட்சி சம்பந்தப்பட்ட எந்த விசயமும் தெரியாது. விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது தெரியாது. விஜயகாந்த் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். ஆகவே தனிப்பட்ட முறையில் நானும் அவரை விமர்சித்தேன். எனக்கும் தன்மானம் இருக்குல்ல.
மட்டப்படுத்த நினைத்தார்கள்
நான் தென்மாவட்டத்தில் பவர் புல்லாக இருந்ததால், என்னை மட்டப்படுத்த வேண்டும் என்றே செய்தார்கள். கலைஞர் கட்டுப்பாட்டில் கட்சி இருந்திருந்தால், என்னை நீக்கம் செய்திருக்க மாட்டார்கள். கலைஞர் கட்டுப்பாட்டில் திமுக இல்லை.
சொல்ல விரும்புவது என்ன?
அமைதியாக இருங்கள். கலைஞர்தான் நமக்கு தலைவர் என்றுதான் சொல்ல விரும்புகிறேன். ஸ்டாலினுக்கு பொருளாளர் என்ற பொறுப்பை கொடுக்கச் சொன்னதே நான் தான். கட்சிக்காக உழைத்ததால் அப்படிச் சொன்னேன். கலைஞர் எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும். ஒரு பக்கமாக செல்லக்கூடாது.
ஆ.ராசா மீதான குற்றச்சாட்டை
திமுக போனதற்கு காரணமே 2ஜிதான். அதில், நல்லவர்கள் மாட்டியிருக்கிறார்கள்; கெட்டவர்கள் மாட்டாமல் இருக்கிறார்கள். பல விசயங்கள் இருக்கிறது அதில். இதற்கு மேல், நான் அந்த விசயத்தில் உள்ளே போக விரும்பவில்லை.
பாஜக அணிக்கு எத்தனை சீட் கிடைக்கும்?
10 சீட் கிடைக்கலாம். மோடி அலை இருக்கிறது. பார்க்கலாம். அதிமுக பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள். பார்க்கலாம். திமுக வேட்பாளர்களை சரியாக போடாததால் மூன்றிலிருந்து 5 இடங்கள்தான் வரும்.
மீண்டும் காங்கிரசுடன் திமுக கைகோர்க்குமா?
காங்கிரஸ் மூன்றாவது அணி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், இவர்தான்( ஸ்டாலின்) கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டாரே நேருக்கு மாறாக.
அரசியலில் மாற்றம் இருக்கும்தானே?
ஆமாம், அரசியலில் இது சகஜம். இன்னும் சொல்லப்போனா அரசியல் ஒரு சாக்கடை. அதில் எது வேண்டுமானாலும் இருக்கும்.
கலைஞர் குறித்து உங்கள் மனதில் இருப்பது?
மிகப்பெரிய ஆற்றல் மிக்க ஒரு அரசியல்வாதி. அவரைத்தவிர யாரும் அந்தக்கட்சியை நடத்த முடியாது.
ஸ்டாலின் என்று சொன்னதும் உங்கள் மனதில் சட்டென்று தோன்றுவது?
வினை பிடித்தவர்.
கனிமொழி?
நல்ல பெண்மணி.
விஜயகாந்த்?
நல்ல நண்பர்.
ஜெயலலிதா?
சிறந்த நிர்வாகின்னு சொல்லச் சொல்லுறீங்களா? ... சென்னையிலேயே இருந்து அரசியல் வேலையை கவனிக்கணும். அந்த அம்மாகிட்ட சொல்ல விரும்புவது அதுதான்.
நரேந்திர மோடி..?
குஜராத்தின் சிறந்த நிர்வாகி.
சோனியாகாந்தி?
மிகவும் பிடித்தமானவர்.
மன்மோகன்சிங்?
அமைதியானவர்; அடக்கமானவர்;என் மீது மிகவும் அன்பு கொண்டவர்.