அழகிரி நீக்கம் - மதுரையில் பரபரப்பு - அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!
மதுரை: மதுரையின் அசைக்க முடியாத அரசியல் புள்ளியாக பல காலமாக வலம் வந்தவரான மு.க.அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பது மதுரை முழுவதும் பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.
திமுகவினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அழகிரி நீக்கம் குறித்த பேச்சாகவே இருக்கிறதாம். ஏற்கனவே அடுத்தடுத்து அழகிரி ஆதரவு நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்ததால் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட களேபரங்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.
இந்த நிலையில், அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்களும் அதிர்ந்து போயுள்ளனர். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் அவர்கள் உள்ளனராம்.

அழகிரி தொண்டர்களின் சித்திரைத் திருவிழா
அழகிரியின் பிறந்த நாள் ஜனவரி 30ம் தேதி வருகிறது. வருடா வருடம் அழகிரி பிறந்த நாளையொட்டி மதுரையை அதகளப்படுத்தி விடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். அதுதான் அவர்களுக்கு சித்திரைத் திருவிழா போல. அது திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு சற்றும் குறைவிருக்காது.

கசந்து போன பிறந்த தினம்
ஆனால் இந்த ஆண்டு அழகிரி ஆதரவாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவருக்கே கூட கசப்பான பிறந்த தினமாக மாறி விட்டது - காரணம் கட்சியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டுள்ளதால்.

ஒரு மாதத்திற்கு முன்பு வெடித்த சர்ச்சை
இந்த ஆண்டும் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஒருமாதத்திற்கு முன்னரே வாழ்த்து போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர் ஆதரவாளர்கள். இதுதான் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதிப்பு
அழகிரியை வாழ்த்திய போஸ்டர்களில் இருந்த வாசகங்கள் ஸ்டாலினைச் சீண்டுவதாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்குக் கொண்டு போனார்கள். ஸ்டாலினும் கொதிப்படைந்தார். இதையடுத்து மதுரை திமுக நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது கட்சித் தலைமை.

அழகிரி கோபம்..
இதனால் அழகிரி கோபமடைந்தார். இருப்பினும் எதுவும் அவர் பேசவில்லை. அவரையும், கருணாநிதியையும் சந்திக்க வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வீடு வரை வந்து சந்திக்காத அழகிரி
இதையடுத்து கருணாநிதியின் வீட்டுக்கு வந்தார் அழகிரி. ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லை. அவரது மகள் உள்ளிட்டோ்தான் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. புன்னகையுடன் போஸ் கொடுத்த புகைப்படமும் வெளியானது. சமரசம் ஏற்பட்டதாகவும் கருதப்பட்டது.

நேற்று மீண்டும் ஐவர் நீக்கம்
இந்த நிலையில்தான் நேற்று மீண்டும் ஐந்து அழகிரி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இது அழகிரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. இதையடுத்தே இன்று காலை அவர் கோபாலபுரத்திற்கு அவசரமாக விரைந்தார். கருணாநிதியைச் சந்தித்தார்.

கொண்டாட்டம் களையிழந்தது
இப்படி அடுத்தடுத்து நடந்த திருப்பங்களால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள அழகிரி ஆதரவாளர்கள் இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதிலும் ஈடுபடாமல் அமைதியாக உள்ளனர்.
கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அழகிரி இன்று மதுரை விரைகிறார். நாளை தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications