ஆரணிக்கு வருகிறார் மு.க.அழகிரி.. பாமகவினருடன் ஏ.கே.மூர்த்தி சந்திக்கிறார்.. டென்ஷனில் திமுக!
ஆரணி: தென்னகத்து மு.க.அழகிரி நாளை ஆரணிக்கு வருகிறார். இதனால் திமுகவினர் தரப்பில் பரபரப்பு நிலவுகிறதாம்.
ஆரணியில் உள்ள பல திமுகவினரைப் பார்க்கவே முக்கியமாக அழகிரி ஆரணிக்கு வருகிறாராம். இவர்கள் அனைவருமே திமுக அதிருப்தியார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இவர்களை வைத்து ஆரணி தொகுதியில் தேர்தல் சமயத்தில் அழகிரி குட்டையைக் குழப்பத் திட்டமிட்டுள்ளாக திமுகவினர் மத்தியில் பீதி கிளம்பியுள்ளாம்.
கோபத்தில் உலா வரும் அழகிரி
மு.க.அழகிரி படு பயங்கரமான கோபத்தில் இருந்தாலும், தனக்கே உரிய பாணியில் அதை அடக்கி வைத்துக் கொண்டு பதறாமல், நிதானமாக பல காய்களை நகர்த்தி வருகிறார்.
சொல்லிட்டாலாவது பரவாயில்லையே
அவர் என்ன செய்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதே தெளிவாகத் தெரியவில்லை திமுகவினருக்கு.
எப்படி அடிப்பாரோ
அவர் திமுகவின் வெற்றி வாய்ப்புகளில் எ்ப்படி விளையாடப் போகிறார், என்ன மாதிரியான அடியைக் கொடுக்கப் போகிறார் என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து பல தலைவர்களையும் சந்தித்துள்ளார். தனது கட்சியினரையும் சந்தித்து வருகிறார். இதனால்தான் திமுகவினர் மத்தியில் பீதி நிலவுகிறது.
திமுகவினருடன் சந்திப்பு
ஆரணிக்கு வரும் அழகிரி, கட்சியின் முன்னோடியான எம்.கே.ஏழுமலையை சந்தித்து பேச உள்ளார். மேலும் ஆரணி, போளூர், தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதியிலுள்ள திமுக அதிருப்தியாளர்கள் மு.க.அழகிரியை சந்தித்து ஆதங்கத்தை கூற உள்ளனர். அவர்களையும் மு.க.அழகிரி சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார்.
ஏ.கே.மூர்த்தி சந்திக்கிறார்
ஆரணி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். வைகோவே அழகிரியை நேரில் போய்ச் சந்தித்து விட்டதால், தன் பங்குக்கு மூர்த்தியும், ஆரணிக்கு வரும் அழகிரியைச் சந்திக்கவுள்ளாராம். அவரிடம் ஆதரவும் கோரவுள்ளாராம். பாமகவினரும் திரளாக அழகிரியைச் சந்திக்கவுள்ளனராம்.
திமுக டென்ஷன்
இப்படி ஆரணிக்குள் அதிரடியாக புகும் அழகிரியால் தங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்று தெரியவில்லையே என்று திமுகவினர் கவலையில் உள்ளனராம்.